×

3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தம் தெற்கு ரயில்வே அறிவிப்பு இன்று 30ம் தேதி மட்டும்

வேலூர், ஏப்.30: காட்பாடி ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள் காரணமாக மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூரில் இருந்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரலக்கு காலை 6.20 மணிக்கு புறப்பட்டு செல்லும் வண்டி எண் 12680 கோயம்புத்தூர்-டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. மறுமார்க்கத்தில் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.35 மணிக்கு கோயம்புத்தூர் நோக்கி புறப்பட்டு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. இது மீண்டும் மாலை 4.15 மணியளவில் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட்டு செல்லும். அதேபோல், மைசூருவில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் வண்டி எண் 12610 மைசூரு-டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. இதுதவிர டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. இந்த ரயில் மறுமார்க்கத்தில் தனது வழக்கமான நேரமான மாலை 5.30 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.

சென்னை பீச்-வேலூர் கன்டோன்மென்ட் மெமு ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு: வண்டி எண் 06033/06034 சென்னை பீச்-வேலூர் கன்டோன்மென்ட்-சென்னை பீச் மெமு ரயில் நாளை மறுநாள் 2ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாலை 6 மணியளவில் சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து புறப்படும் மெமு ரயில் இரவு 9.35 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் வந்தடைகிறது. இந்த ரயில் அங்கிருந்து பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒண்ணுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மாதிமங்கலம், போளூர் என நின்று நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை அடைகிறது. அங்கிருந்து மறுமார்க்கத்தில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, போளூர், மாதிமங்கலம், ஆரணி ரோடு, சேதாரம்பட்டு, ஒண்ணுபுரம், கண்ணமங்கலம், பென்னாத்தூர், வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 5.40 மணிக்கு வருகிறது. இங்கிருந்து வழக்கமாக காலை 6 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, சேவூர், திருவலம், முகுந்தராயபுரம், வாலாஜா ரோடு, தலங்கை, அன்வர்திகான்பேட்டை, சித்தேரி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர், ராயபுரம் வழியாக சென்னை பீச் ரயில் நிலையத்தை அடைகிறது. இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தம் தெற்கு ரயில்வே அறிவிப்பு இன்று 30ம் தேதி மட்டும் appeared first on Dinakaran.

Tags : 3 Express Trains ,Gadpadi Southern Railway ,Vellore ,Gadpadi railway ,Coimbatore ,Chennai MGR Central ,Gadpadi ,Southern ,Railway ,Dinakaran ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...